Thursday, October 11, 2012

விமர்சனம்


விமர்சனம் – பாரதி அட்சயா

சொல்லவும்http://wpteach.com/wp-content/uploads/2012/04/comment.png
முடியவில்லை
சொல்லாமலிருக்கவும்
முடியவில்லை.
உப்பு தூக்கல்
புளி கம்மி
என கருத்து சொல்தல்
என் கடமையல்லதான்..
ஆனால் கருத்து கேட்டு
சுவை கூட்டல்
உன்னை அடுத்த தளத்துக்கு
உயர்த்துமல்லவா?
உனை பாராட்ட மட்டுமே
வேண்டுமென,
உன்னைபோலவே
நானும் விழைகிறேன்
என்பதை நீ அறிவாயா?
பார்த்தவனுக்கு என்ன தெரிகிறதோ
என்ன புரிகிறதோ
அதுதானே ஓவியத்தின் மதிப்பு?
நீ அழகாக இருப்பதாய்
நீயே உணர்ந்துவிட்டால்
உன் இல்லத்தில்
கண்ணாடி எதற்கு?
முன்பு சொன்னபோதெல்லாம்
அது சரியாகப் புரிந்து
கொள்ளப்படவில்லை
எனும் உண்மை
தெளிவாய்த் தெரிந்த போதும்
இம்முறையும் அது நிகழும்
எனும் நிகழ்தகவை
உணர்ந்த போதும் என்னால்
சொல்லாமலிருக்க முடியவில்லை.
விவாதங்கள் வளரா இடத்தில்
தேக்கங்கள் நிச்சயம்.
அதனுடன் முடை நாற்றமும்.
பாராட்டு விவாதமாகி,
விவாதம் திசைக்களவாகி
விதண்டாவாதமாய்ப் போன பின்
ஒவ்வொரு முறையும்
தோன்றுமெனக்கு
இனி சொல்லக் கூடாதென.
அந்த பிரசவ வைராக்கியம்
அடுத்த முறை உடைக்கப்பட்டு
மறுபடியும் சொல்லப் போய்
இம்முறை உன் மௌன
மறுதலிப்பை பதிலாய் வாங்கி
வலி உணர்கிறேன் நான்.
ஆனால் வழக்கம் போலவே
அது உன் மீதானது என வசதியாய்
புரிந்து கொள்கிறாய்
உன் மீதல்ல என்பதை
உணர்ந்த போதும்.
வலி மறந்த பிறிதொரு நாளில்
மீண்டும் என் விமர்சனம் வரலாம்.
அப்போது உன் எதிர்வினை
என்னவாய் இருக்குமென
அனுமானிக்கத் தெரியவில்லை..
எப்போது புரிந்து கொள்வாய்,
என் விமர்சனம்
இன்னும் உன் மேல் நான்
வைத்திருக்கும்
நம்பிக்கையின்
வெளிச்சக்கீற்றென்று?
ஒரு நாள் நிச்சயம்
நான் மௌனியாவேன்
உன் வரையில்.
அது உன் வளர்ச்சி வரைபடத்தில்
வளைவின் உச்சப் புள்ளி….

– பாரதி அட்சயா
    சென்னை

No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..