Tuesday, July 31, 2012

கவிதையில்லை, கவிஞனில்லை....


தோன்றிய கவிதை
எழுதுமுன்பு மறந்ததென்று
புலம்பினானொருவன்.
எழுதியவன் நீயிருக்க
புலம்புவதேன், எழுது மறுபடியும்...
எழுதிய கவிதைப்
புத்தகமே தொலைந்ததென்று
கதறினான் இன்னொருவன்.
உன்னிடம் போனாலென்ன,
தேடிப் பார் மற்றவரிடம்..
கவிஞரையே காண்வில்லையென
பதறினான் அங்கொருவன்.
ஒரு கவிஞன் போனாலென்ன
உண்டிங்கே ஆயிரம் பேர், போடா போடா..
கவிதை படிக்கவேயிங்கு யாருமில்லை
என்ன செய்வேன், பேதலித்தான் இங்கொருவன்
எழுதவும் ஆளில்லை, படிக்கவும் ஆளில்லை
ஆகா, ஈதல்லவோ பேரமைதி
போடா, போய் தியானம் செய்.
புண்ணியமாய் போகட்டுமுனக்கு!

Monday, July 23, 2012

நரகம் கொடு...



தினம் உன்னைத் தொழுகிறேன்,
தீயதெதும் செய்வதில்லை,
உனை வேண்டி நிற்பதெல்லாம்
என் காலம் முடியுங்கால்
என் விருப்பம் போலேயெனை
நரகத்திலே சேர்த்து விடு,
புண்ணியம் செய்தேனென்று
சொர்க்கத்தில் தள்ளி விடாதே
புண்ணியமாய் போகும் உனக்கு!
ஈதென்ன விந்தை,
பூலோக வாழ்வதனில்
பொன் தேடி, புகழ் தேடி
களைத்த மாந்தர் இறந்த பின்னர்
சோர்வு நீக்கும் சொர்க்கமதை
வேண்டி நிற்றல்
நான் அறிந்த ஒன்று,
ஈதென்ன விந்தை
நரகத்தை நோக்குமொரு
நங்கையிவள் சிந்தையிலென்ன
உண்டென வியந்தாள்
ஆண்டவனை தொழுது உடன்
அருகில் நின்ற ஒருத்தி!
ஒன்று பெற்றேன் அதுவும்
நஞ்சைப் பெற்றேன்.
நித்தமொரு பொய்,
சித்தமெலாம் வஞ்சனை
பித்தலாட்டம் திருட்டென
மொத்தக் குத்தகையாய்
அத்துனையும் செய்கின்றான்
திருத்தவோ, வெறுக்கவோ
இயலவில்லை என்னால்
தாயாய் அவனை சீராட்டி வளர்த்தேன்
இக்கணமும் அவனென் பிள்ளை
நெஞ்சிலே சுமக்கின்றேன்..
நாளையவன் செத்த பின்னர்
நிச்சயமாய் நரகந்தான்.
தண்டனைக் காலந்தனில்
தனியாய் விடலாமா
தாயாய் அங்கவனை அனுதினமும்
காத்து நின்று, புண்ணுக்கு மருந்திட்டு
அவன் புலம்புங்கால் தோள் சாய்த்து
ஆதரிக்க நான் வேண்டும்,
அவனை அவதரித்த தாய் வேண்டும்
ஆதலினால் வேண்டி நின்றேன்
பிறர் அஞ்சுகின்ற நரகந்தனை!
கண்ணிரண்டில் நீர் கரைய கரம்
குவித்து நின்றாள் பெண்ணவளே!

மூலம் : ஆங்கிலத்தில்: உமா பாபு
தமிழில் மொழியாக்கம்: தி.ந. இளங்கோவன்

Saturday, July 21, 2012

பேசு....



தி.ந.இளங்கோவன்

பேசு, ஏதாவது பேசு.
பேசாமலேயே ஒரு மனது
கொல்கிறது என்னை!
ஊதாமலேயே ஒரு நெருப்பு
கனல்கிறது இங்கே!

பேசு, ஏதாவது பேசு.
இம்மௌனம் நீ என் மேலியற்றும்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் !
மோசமான ஒரு வசைபாடலைவிட
மோசமானது உன் மௌனம் !

பேசு, ஏதாவது பேசு.
உன் மௌனம் தொடரத் தொடர
என் பேச்சும் நீள்கிறது,
அஸ்தமனத்தில் நீளும்
கட்டிட நிழல் போல !
தொடர்ந்து நம்மை காரிருள்
வந்து கவியுமோவென
கலங்கி நிற்கிறேன் நான்.

பேசு, ஏதாவது பேசு.
உன் மௌனம்
சம்மதத்துக்கான சமிக்ஞை அல்ல,
மிகப்பெரிய எதிர்ப்புக் குரலின்
தொடர் ரீங்காரம்.
சப்தம் இல்லாமலேயே
எனை சாய்க்கும் குரூரம்.

பேசு, ஏதாவது பேசு.
நாளை ஒன்றே இல்லையென்பது போல்
நான் பேசிக் கொண்டேயிருக்கிறேன்.
நான் என்ற ஒருவனே
இல்லாதிருப்பது போல்
நீ மௌனமாயிருக்கிறாய்.
நான் உண்மையிலேயே இல்லாது போனாலும்
நீ இப்படித்தான் இருப்பாயா என்றறிய
நானிருக்க மாட்டேன், நல்ல வேளை.

பேசு, ஏதாவது பேசு.
என்னில் வடிந்த குருதி
போதுமென்று தணிந்தால்
பேசிக் கலைத்து விடு
இந்த குரூர மௌனத்தை !
நெருப்பின்றி மன உலையை
கொதிக்க வைத்தது போதும் !
என் முழு நானும்
வெந்து அவிவதற்குள்
பேசு, ஏதாவது பேசு !

புகைப்படத்துக்கு நன்றி:

Wednesday, July 4, 2012

கடிதங்கள்


இளங்கோவன்

சோர்ந்த மனத்தின்
சொல்லம்புப் பாதைகள் ..

சோக நீர் வயலின்
வடிகால் வாய்க்கால்கள்..

பறந்து களைத்த பருந்தின்
இறக்கைப் படபடப்புகள்..

உயவிழந்த வண்டியின்
உரசல் முனகல்கள் ..

புத்தாற்று வெள்ளத்தின்
புன்சிரிப்புச் சிதறல்கள்..

உரசும் மூங்கில்களின்
உணர்ச்சிப் பொறிகள்..

அக்காக் குருவியின்
அன்புக் கதறல்கள்..
நெருப்பில் வெடிக்கும்
கொட்டாங்கச்சிச் சிதறல்கள்..

பதுங்கு நரியின்
பகல் வேஷங்கள்..

காதல் நிலவின்
கவின்மிகு ஒளிப் பொழிவுகள்..

எண்ணிலடங்கா அர்த்தம் சுமக்கும்
கடிதங்கள் முன்பெல்லாம்
அஞ்சலட்டைகளாய்..
இப்போதோ
மின்னஞ்சல்களாய்..

படத்திற்கு நன்றி: http://www.postalstationery.org/html/india_post_card_of_1902.html 

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?


டி.என். இளங்கோவன்
“என்ன செய்யப் போறேனோ தெரியல.. இந்த வருஷம் என் பையன் +2 முடிக்கப் போறான்.. அவன் படிக்கறதப் பாத்தா பணம் கொடுத்துத்தான் எஞ்சினியரிங் சீட் வாங்கனும் போல இருக்கு. இருக்கிற சேமிப்பு இதிலியே போயிடுச்சுன்னா,அடுத்த வருஷம் என் மூத்தப் பொண்ணுக்கு எப்படிக் கல்யாணம் செய்யப் போறேன்.. ஒன்னும் புரியல.. ஒரே கவலையா இருக்கு..”
“என்னமோ பிஸினஸ் சரியாவே போகலை. கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துடுமோ? பயமா இருக்கு”
இதைப் போல புலம்பும் கூட்டத்துள் ஒருவரா நீங்கள்? அப்படியென்றால், நீங்கள் இதை நிச்சயம் படிக்க வேண்டும்.
உங்கள் குடும்பத்தினருக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும் குறைவின்றிக் கொடுக்கும் அளவுக்கு நீங்கள் வசதி படைத்தவர்.. நன்கு உழைப்பவர். குடும்பத்தினர் நலனையே குறியாய்க் கொண்டு எந்நாளும் உழைப்பவர்.
அப்படி இருக்கையில், உங்கள் மகனோ, மகளோ, “என்ன செய்யப் போகிறோமோ தெரியல. நாளைக்குச் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ.. இந்த மாதம் காலேஜ் பீஸ் கட்ட முடியுமா?” என்றெல்லாம் கவலைப் பட்டால், தந்தையாகிய உங்களுக்கு அவர்கள் மேல் கோபம் வருமா? வராதா?
நான் எவ்வளவு கஷ்டப் பட்டாலும், உங்களுக்கு வேண்டிய அத்தனை வசதியையும் செய்து கொடுக்கிறேனே.. உங்களுக்கு என்ன குறை வைத்தேன்? என்று பதிலுக்கு உங்கள் மகனையோ, மகளையோ கேட்பீர்கள் அல்லவா?
அவர்கள் கவலைப்படுவது, உங்களை அவமானப்படுத்துவதாக எண்ணுவீர்கள் அல்லவா?
கிட்டத்தட்ட இதே போன்ற கோபம் உங்கள் மேல் கடவுளுக்கு வராதா? உங்கள் புலம்பலைக் கேட்கும் போது !
நீங்கள் வாழ்க்கையில் பெற்ற வெற்றிகள் அனைத்தும்,உங்கள் முயற்சியில் மட்டுமே விளைந்தவை என்று நீங்கள் நம்புகிறீர்களா?
கடவுள் அருள் இன்றி உங்களால் எதையுமே சாதிக்க இயலாது என்பதை இன்னுமா நீங்கள் உணரவில்லை? அங்ஙனம் உணர்ந்திருந்தால், நீங்கள் வாழ்க்கையில் புலம்பவே மாட்டீர்கள்.
புலம்புதல், அங்கலாய்த்தல், இவையெல்லாம், கடவுளை உண்மையிலேயே நம்பாததன் அடையாளம்.  அதற்கும் மேலாய், கடவுளை அவமதிக்கும் செயல்.
கடவுளை நம்பும் அல்லது நம்பாத மனிதன் ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டிய செயல், கவலை கொள்ளுதல்.. அதனால் புலம்புதல்..
கடவுளை நம்புகிறவன் புலம்பினால் அது கடவுளை அவமானப்படுத்துவதாகும்.
கடவுளை நம்பாதவன் புலம்பினால், அது அவனையே அவமானப்படுத்திக்கொள்வதாகும்.
இவை எவ்வகையிலும் நன்மை பயக்காது.. மேலும் தீமையையே விளைவிக்கும்.
நம்மைச் சுற்றி உள்ளோரிடம், நம்பிக்கையின்மையை விளைவித்து, ஒட்டு மொத்த அழிவுக்கு வழி கோலும்.
வாழ்க்கையில், எதிர்மறைச் சூழல்களைப் பற்றிய கவனமும், அறிவும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவற்றை எதிர் கொள்ள முடியும். அங்ஙனம் சிந்திப்பது கவலை கொள்வதாகாது. ஆனால், எவ்விதத் திட்டமுமின்றி, கவலை கொள்ளுதலையே தொழிலாய்க் கொண்டு அலைவோரிடம் இருந்து நாம் சற்று விலகியிருத்தல் நலம்.
ஏனென்றால், ஒரு வகையில், அவர்களும், துஷ்டர்களே.. அவர்களிடமிருந்து விலகித் தூர இருத்தல் நல்லதுதானே?

படத்திற்கு நன்றி: http://ultimatemillionairemind.com/tag/strenghten-your-faith-to-god

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும்..


இளங்கோவன்
இணையத்தில் வருவதெல்லாம் உண்மையெனும் எண்ணம் இளைய தலைமுறையினரிடம் பரவலாக இருக்கிறது. அறிவைப் பெருக்க உதவும் இணையம், அதே நேரத்தில் பல பொய்யான தகவல்களையும் பரப்பும் தளமாகவும் அமைந்து விடுகிறது.
Facebook-ல் எனக்கு வந்த ஒரு தகவல், ஒரு புகைப்படத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அந்தப் புகைப்படம் உலகத்தின் மிக உயர்ந்த “புர்ஜ் துபாய்” கட்டடத்தின் மேலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அந்தப் புகைப்படத்தின் ஒரு மூலையில் பார்த்தால் உலகம் சுழல்வதைப் பார்க்கலாம் என்றும் சிறு குறிப்பும் அதில் இருந்தது.
இந்தத் தகவலுக்கு 50 பேர் “Like” என்று தெரிவித்திருந்தார்கள். இன்னுமொரு 15 பேர் “wow” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இவர்கள் எல்லோருமே குறைந்த பட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. புவியீர்ப்பு விசைக்குள் இருந்து கொண்டு பூமி சுழல்வதை எப்படிப் பார்க்க இயலும் என்பதை அவர்களுள் ஒருவருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. அது மட்டுமல்லாது, அந்தத் தகவலை தங்களுக்குத் தெரிந்த மற்ற நண்பர்களுக்குப் பரிமாறுவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு தவறான தகவல், தொழில் நுட்ப உதவியுடன் உலகம் பூராவும் கண நேரத்தில் பரவுகிறது.
இதைப் போல பல மின்னஞ்சல்களையும் தகவல்களையும் கண்டு மனம் நொந்து போய்த் தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
எனக்கு ஒரு தகவல் வருகிறது. அது பொய்யோ, உண்மையோ, அதை நானும் பலருக்குப் பரப்புவேன் என்பது, பொறுப்பற்ற தன்மையில்லையா? இளைய தலைமுறையினர் இதை உணர வேண்டாமா?
படித்த உடனேயே ஏதாவது comment  அல்லது கருத்துச் சொல்லியே தீர வேண்டிய கட்டாயத்தில் இளைய தலைமுறையினர் இருக்கின்றனர். அந்த அவசரம் தான் ஆராயாமல் கருத்துச் சொல்வதும், forward செய்வதுக்குமான காரணம்.
ஒரு புதிய மின்னஞ்சலோ, இணயத்தகவலோ உங்களுக்கு வந்தால், நம்முடைய common sense-ஐ உபயோகித்து அது உண்மையாக இருக்குமா என்ற ஆராய்ந்து உறுதி செய்யாமல் அதைப் பிறருக்கு forward  செய்வது தவறல்லவா? ஒரு பொய்யைப் பரப்புவதில், நாமும் சங்கிலியின் ஒரு வளையமாகி விடுகிறோமல்லவா?
மின்னஞ்சல் வசதி என்பது, வர வர,  நாற்றமெடுக்கும் குப்பைக்கூடையைப் போல் ஆகி விட்டது.  ஏற்கனவே, வணிக ரீதியில் வந்து சேரும் குப்பைகளுடன், இதே போன்று பொறுப்பற்று “Forward”  செய்யப்பட்டு வரும் மின்னஞ்சல்களும் சேர்ந்து நம்மை வதைக்கின்றன..
நிஜ வாழ்க்கையில் குப்பைகள் குப்பைத்தொட்டிக்குத் தான் போக வேண்டும், அது யாரிடமிருந்து வந்தாலும் சரி.. அதே போலத்தான், குப்பை மின்னஞ்சல்களை குப்பைத் தொட்டிக்கு (trash)  அனுப்புங்கள், உங்கள் உற்ற நண்பர் அனுப்பியிருந்தாலும் !
சுய சிந்தனைகளைப் பகிர்தல் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், குப்பைகளைப் பகிர்தலையாவது குறைப்போமா? சிந்திப்போம்..

வாழ்ந்து காட்டுதல்



தி.ந.இளங்கோவன்
வேலை கொடுப்பதொன்றே
உம் வேலையென் றெண்ணி யெனக்கு
சுமையேற்றியே யதில் சுகம் கண்டாய்,
சொல்லித்தர மறந்தாய், சில நேரம் மறுத்தாய்.

சுயம்புவாய்க் கற்றேன்,
சூட்சுமங்களனைத்தையும்…
கொடுத்த பணியில்
நிலுவை வைத்தது நினைவிலேயே யில்லை…

பாராட்டென்ற வார்த்தையே யுமக்கு
பழக்கமில்லா தொன் றென்பதை
அனுபவத்தில் அனுதினமும்
எதிர்பார்த்து கண்டுணர்ந்தேன்.

ஆனாலும் அரிதிலும் அரிதாய்
இழைத்துவிட்ட சின்னஞ்சிறு
தவறொன்றை ஊதிப் பெரிதாக்கினாய்..
பிறர்முன் என்னை சிறிதாக்கினாய்.

இருந்த போதும் உமக்குப் பாதம் பணிகிறேன்…
ஒரு அதிகாரியாய் எப்படி இருக்கக் கூடாதென
உதாரண புருஷனாய் நித்தனித்தம்
வாழ்ந்தெனக்கு காட்டுவதால்…

படத்திற்கு நன்றி :