Thursday, March 8, 2012

அதிகாலைக் கனவு.....

அரூபமாய் நான் ஆகாயத்தில்.


அமாவாசை இரவில்

சுழன்றடிக்கும் சூறாவளி!

பெருக்கெடுக்கும் மழை நீர்!

முறிந்து விழும் மரங்கள்!

எதற்கும் கலங்காமல்

இலக்கை நோக்கி

தனியே நடக்கும் ஓர் உருவம்,

தலையில் முக்காடிட்டு!

அடுத்த காட்சியில்...

சுட்டெரிக்கும் சூரியன்,

துவண்டு நிற்கும் தாவரங்கள்,

மாறி மாறிக் காட்சிகள் ஒவ்வொன்றாய்,

பாலையாய், மலையாய்,

படர்ந்து கிடக்கும் முட்காடாய்,

சோலையாய், நதியாய்,

பூத்து நிற்கும் பூவனமாய்,

எல்லாவற்றிலும்,

காலில் செருப்பின்றி

எதற்கும் கலங்காமல்

இலக்கை நோக்கி

தனியே நடக்கும் ஓர் உருவம்,

தலையில் முக்காடிட்டு!

ஆர்வம் தாங்காமல்

அருகே சென்று

முகம் காட்ட வேண்டினேன்,

பார்த்ததும் அதிர்ந்தேன்..

ஆலிலை கண்ணனின்

அகண்ட வாய்க்குள்

தெரிந்த அண்டம் போல்,

அந்த ஒரு முகத்தில்,

பூமியில் உள்ள அத்துனை

பெண்களின் முகங்களும்

ஒன்றிணைந்து தோன்ற...

கனவு கலைந்தது......

சுழலும் பூமியின்

அச்சாய் எமைத் தாங்கும்

அனைத்து மகளிருக்கும்

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!